மதுபோதையில் அரச பேருந்தை செலுத்திய யாழ் சாரதியை சேவையிலிருந்து உடனடியாக நீக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பணித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவுறுத்தலை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் இன்று வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் சாலையில் பணியாற்றும் சாரதியே இவ்வாறு சேவையிலிருந்து நிறுத்தப்படவுள்ளார்.
கடந்த புதனன்று இரவு 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு புறப்பட்ட பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, குறித்த சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பேருந்தை சோதனையிட்ட போது, 2 பியர் ரின்களும் சாராயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டன.
இந்நிலையில் சாரதி கடுமையாக எச்சரிக்கைப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாரு இ.போ. சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.
அத்துடன் பேருந்தில் பயணித்த 46 பயணிகளும் அக்கரைப்பற்றுக்கு பயணிப்பதற்கு கோண்டாவில் சாலையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து வரவழைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.