தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்றைய தினம் இ.தொ.கா வுக்கும் தொழிலமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது இ. தொ. கா தொழிலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பளப் பிரச்சினை தொடர்பில் அனைத்து விடயங்களையும் இ. தொ.கா தொழிலமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் சுமுகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தோட்டக் கம்பனிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இதன்போது தொழிலமைச்சர் தெரிவித்துள்ளார். கம்பனிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் மீண்டும் இ. தொ. கா வை சந்திக்கப்போவதாகவும் இதன்போது அவர் இ. தொ. கா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய இந்த பேச்சுவார்த்தை தொழிலமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து நேற்றும் மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒத்துழையாமை போராட்டம் நேற்று ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.