கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பிறப்பு உரிமை குடியுரிமை, அல்லது பிரசவ சுற்றுலா என்னும் ஒரு விடயத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பிரசவ சுற்றுலா என்பது என்ன?
கனடாவைச் சேராத கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைக்கு கனேடிய குடியுரிமை பெறும் நோக்கத்துடன் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கனடாவுக்கு வருவது பிரசவ சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவ உதவி மற்றும் கல்வி போன்ற சலுகைகள் இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுவதோடு, அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது தங்கள் பெற்றோர் கனடாவுக்கு புலம்பெயர அவர்களுக்கு ஸ்பான்சர் செய்யலாம்.
Jus soli அல்லது ’இந்த மண்ணில் பிறந்ததால் குடியுரிமை என்னும் இந்த நடைமுறை’ 1947இல் முதல் கனேடிய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தே நடைமுறையில் உள்ளது.அதிலிருந்தே கனடாவில் பிறக்கும் எந்த குழந்தையும், தூதரக அதிகாரிகளின் குழந்தைகள் தவிர்த்து, தானாகவே கனடா குடிமகனாக ஆகிவிடுகிறது.
ஆனால், அந்த குழந்தையின் பெற்றோர் இம்முறையில் குடியுரிமை பெற முடியாது, ஒரு விருந்தினராக தற்காலிக தங்கும் உரிமை பெற்றோ, ஒரு மாணவராகவோ, அல்லது பணியாளராகவோ வேண்டுமானால் தங்க முயற்சி செய்யலாம்.
அதிலும் ஒரு சிக்கல் என்னவென்றால் ’இந்த மண்ணில் பிறந்ததால் குடியுரிமை’ என்னும் இந்த நடைமுறை வழக்கத்தில் இருப்பதால், கனேடிய புலம்பெயர்தல் துறை அவ்வளவு எளிதாக தற்காலிக தங்கும் உரிமை அளிப்பதில்லை.
அதுமட்டுமின்றி ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே அவரை நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதில்லை என்றாலும், மருத்துவ நோக்கத்திற்காக கனடாவுக்குள் வரும் ஒரு வெளிநாட்டு நபர் மருத்துவ செலவுக்கான பணம் வைத்திருக்கிறார் என்று நிரூபித்தால் மட்டுமே அவர் கனடாவிற்குள் அனுமதிக்கப்படுவார் என்று கனடாவின் எல்லை பாதுகாப்பு அமைப்பும் தெரிவிக்கிறது.
என்றாலும் கன்சர்வேட்டிவ் கட்சி இந்த வழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கோரி போராடி வருகிறது.