மெக்சிகோ நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அந்நாட்டு அமைச்சர் மற்றும் ஆளுநர் சென்ற ஹாலிகொப்டர் தரையிறங்கும்போது வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி மற்றும் அருகாமையில் உள்ள சில மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கம் 7.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒக்சாக்கா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நவரேட்டே, ஒக்சாக்கா மாநில ஆளுநர் அலேஜான்ட்ரோ முரட் ஆகியோர் ஹாலிகொப்டரில் பயணம் செய்தனர். இதன்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உள்துறை அமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டோர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளது.