வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, அரசு வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தார்.
வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளுக்கு மாத்திரம், வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எனக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அரசு அத்தகைய திட்டங்களை நடை முறைப்படுத்தும் போது, முதலில் மாகாண சபையுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும். அதனுடன் இணைந்து நடை முறைப்படுத்த வேண்டும்.
தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் போது, வடக்கு -– கிழக்குக்கு மாத்திரமன்றி, எல்லா மாகாணங்களுக்கும் கூட்டாட்சி அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார்.