எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தபால்மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் பெப்ரவரி 10ஆம் திகதி வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்ற பின்னரே எண்ணப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
புள்ளடி இடப்பட்ட தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் பெப்ரவரி 9ஆம் திகதி சிரேஷ்ட தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும். இருந்த போதிலும், பெப்ரவரி 10ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வாக்குப்பதிவு பூர்த்தியான பின்னரே பொதிகள் திறக்கப்பட்டு எண்ணப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
உள்ளுராட்சி தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சமகாலத்தில் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி ருவன் குணசேகர தெரிவித்தார்.
வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் முதல் நாள் தொடக்கம் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்று, மறுநாள் வரை மேதின ஊர்வலங்களையும், சமய ஊர்வலங்களையும் நடத்துவதற்கு மாத்திரமே அனுமதி உள்ளதென்று அவர் மேலும் குறிப்பிட்டார்.