கர்நாடக மாநிலம், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திரா மடத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய மேடை, நிகழ்ச்சி முடிந்த பின், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
சலசலப்பு :
தமிழ், கன்னட திரைப்படங்களில் நடித்து வரும், நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜ.,விற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார். காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ள கர்நாடகாவில், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திர மடத்தில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது, உத்தர கன்னடா பகுதியைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான, அனந்த் குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்து, பிரகாஷ் ராஜ் பேசினார். இது, பா.ஜ., இளைஞர் அணியினர் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற விழா மேடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி களை, பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்ய, பா.ஜ., இளைஞர் அமைப்பினர் முடிவு செய்தனர். இதையடுத்து, சிர்சி நகர, பா.ஜ., இளைஞர் அணி தலைவர், விஷால் மராதே தலைமையில், மேடை உள்ளிட்ட பகுதிகள், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.
அசுத்தம் :
இதன்பின், விஷால் மராதே பேசியதாவது: தங்களை அறிவாளிகள் எனக் கருதும் சிலர், எங்கள் வழிபாட்டு தலங்களை அசுத்தம் செய்கின்றனர். இவர்களின் வருகையால், ஒட்டுமொத்த சிர்சி நகரமே அசுத்தமாகி விட்டது. ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் இவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுவதை அங்கீகரிக்கின்றனர்; இத்தகைய, சமூக விரோதிகளை சமுதாயம் மன்னிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.