திருமண வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட சிலர் நடந்து கொண்ட விதத்தினால் காவல்துறை வரை அந்தப் பிரச்சினை சென்றுள்ளதாக தங்காலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் தங்காலை – நலகம பகுதியிலுள்ள வீடொன்றில் திருமண விருந்துபசார நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அங்கு கூடியிருந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதனை அடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
இதன் போது, மோதலுடன் தொடர்புபட்டவர்கள் அவ்விடத்துக்கு வருகை தர பயன்படுத்திய ஒரு முச்சக்கர வண்டி, நான்கு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியதாக தென் பிராந்திய உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அனைவரும் தங்காலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.கே. ஜயலத் மற்றும் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்சிரி கீதால் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகளை நடாத்திய தங்காலை பொலிஸார் 15 பேரை கைது செய்து விளக்கமரியலில் வைத்துள்ளனர்.