பாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனைக் கைதியாக உள்ள குல்பூஷண் ஜாதவை அவரின் குடும்பத்தார் இன்று சிறையில் சந்தித்துப் பேசினர்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் குல்பூஷண் ஜாதவைக் கடந்த மார்ச் 3-ம் தேதி, பாகிஸ்தான் படைகள் கைதுசெய்தன. பலுசிஸ்தான் பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்குத் தூக்குத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. சர்வதேச நீதிமன்றம், தூக்குத்தண்டனையை நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில், குல்பூஷண் ஜாதவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் தரப்பில் பாகிஸ்தான் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று, ஜாதவைச் சந்திக்க அவருடைய மனைவிக்கு பாகிஸ்தான் அனுமதி அளிப்பதாக நேற்று அறிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாகவும் பாகிஸ்தான் விளக்கமளித்தது.
இதையடுத்து குல்பூஷண் ஜாதவின் தாய் மற்றும் மனைவி இன்று பாகிஸ்தான் சிறையில் அவரைச் சந்தித்துப் பேசினர். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் விரைவில் வெளியிடும் என அறிவித்துள்ளது.