வடகிழக்கு பருவ மழை காரணமாக பெய்த கனமழையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, உணவு வழங்க அதிக அளவில் போலீஸார் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
மழை காரணமாக பாதிக்கப்பட்ட பல இடங்களில் போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சியில் அங்காங்கே உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. காவல்பணி, சமுதாயப்பணி என்பதை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையிலான போலீஸார் மீண்டும் நிரூபித்தனர். இதற்கு காரணம் காவல் ஆணையரே களத்தில் இறங்கியதுதான்.
காவலர்களின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வரும் வேலையில் நடிகர் கமல்ஹாசன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை, போலீஸாரை பாராட்டியுள்ளார். தனது ட்விட்டரில் தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு தலைமையில் போலீஸார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் படத்தைப் போட்டு கமல் காவலர்கள் நிவாரணப்பணியை பாராட்டியுள்ளார்.
காவலர்களை பாராட்டி கமலின் ட்விட்டர் பதிவு:
”அழைப்புக்கு அப்பாற்பட்டு கடமையாற்ற வந்ததற்கு மிக்க நன்றி. நல்ல குடிமகனின் அழகு சீருடை இல்லாமலோ அல்லது சீருடையுடனோ கடமை செய்து நிரூபிப்பதுதான். இதே போன்று அதிக அளவில் தமிழர்கள் தங்களுடைய கடமையை ஆற்ற முன் வர வேண்டும்”.
”இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை”.
இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.