பிரசவம் நடக்கும் அறையில் திடீரென பவர்கட் ஆன நிலையில், ஐபோனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் இளம் பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் கவுண்டியை சேர்ந்தவர் கிளாயர் ஜோன்ஸ்(28), நிறைமாத கர்ப்பமாக இருந்தவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிரசவ அறையில் கிளாயருக்கு பிரசவம் நடந்து கொண்டிருந்த போது திடீரென அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அறை முழுவதும் இருட்டானது.
இதையடுத்து, அங்கிருந்த மருத்துவர் தன்னிடமிருந்த ஐபோனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து அருகிலிருந்த உதவியாளரிடம் கொடுத்தார்.
பின்னர் வேறு சிலரும் தங்கள் போன் டார்ச் லைட்டை ஆன் செய்ய அதன் உதவியுடன் சிரமப்பட்டு கிளாயருக்கு பிரசவம் நல்லபடியாக நடந்து முடிந்து அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து கிளாயர் கூறுகையில், இருட்டில் மருத்துவர்கள் பிரசவம் பார்த்தது எனக்கு பயமாக இருந்தது.
பிரசவத்தின் போது அறை முழுவதும் ரத்தம் சிந்திய நிலையில், அது பேய் படம் போல திகிலாக இருந்தது.
மருத்துவமனை என்னை மரியாதையாகவே நடத்தவில்லை, எல்லோரும் என் மீது ஐபோன் விளக்கு வெளிச்சத்தை பாய்ச்சியது சங்கடமாக இருந்ததாக கூறியுள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்தின் செயலுக்கு கிளாயரின் கணவர் கிரைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யார்க்ஷயர் மருத்துவமனைகள் அறக்கட்டளை குழு சார்பில் பேசிய நபர், நடந்த இடையூறுக்காக கிளாயர் மற்றும் கிரைக்கிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
சம்பவம் நடந்த மருத்துவமனையில் கடந்த மாதம் தான் மின் பராமரிப்பு பணியை செய்தோம். தற்போது தவறு நடந்துள்ள நிலையில் மீண்டும் மின்சார பராமரிப்பு பணியை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.