பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வக்குப்பதிவில் மேக்ரான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி சாதிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் 577 இடங்களை கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடைபெற்றுள்ளது.
இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகளைப் பெறுகிற வேட்பாளர்தான் வெற்றி பெற முடியும்.
அந்த வகையில் எந்தத் தொகுதியில் எல்லாம் அப்படி எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறவில்லையோ அங்கெல்லாம் குறைந்தபட்சம் 12½ சதவீத ஓட்டுகளைப் பெற்ற வேட்பாளர்களை கொண்டு 2-வது சுற்று தேர்தல் 18-ந் திகதி நடைபெற இருக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் மேக்ரான் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பிரான்சில் மேக்ரான் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தனிப்பெரும்பான்மை பெற வேண்டும்.
இந்நிலையில் முதல் சுற்று வாக்குப்பதிவில் எமானுவேல் மேக்ரான் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள 11 பிரெஞ்சு தொகுதிகளில் 10 தொகுதிகளில் மேக்ரான் கட்சி வெற்றி பெற்று விட்டது. இதே நிலைதான் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.