ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸினால் (இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம்) தியகம விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட இரண்டாவது திறன்காண் மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலைநாட்டியதன் மூலம் ஜப்பான் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற ஒலிம்பியன் சுமேத ரணசிங்க தகுதிபெற்றார்.
திறன்காண் போட்டியில் ஈட்டியை 85.78 மீற்றர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் சுமேத ரணசிங்க புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.
தென் கொரியாவின் மொக்போவில் கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற ஆசிய எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க நிலைநாட்டியிருந்த 85.45 மீற்றர் என்ற தேசிய சாதனையையே சுமேத ரணசிங்க முறியடித்தார்.
இதன் மூலம் ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றுவதற்கு நேரடியாக தகுதிபெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை சுமேத ரணசிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியை 8:46.01 நிமிடங்களில் நிறைவுசெய்த இரத்தினபுரி, புனித அலோஷியஸ் கல்லூரி வீரர் லஹிரு அச்சின்த, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய சாதனையை நிலைநாட்டினார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 2.22 மீற்றர் உயரத்தைத் தாவிய ஆனந்த கல்லூரி வீரர் லெசந்து அர்த்தவிது, 20 வயதுக்குட்பட்ட தேசிய சாதனையைப் புதுப்பித்தார்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 31:09.74 நிமிடங்களில் நிறைவு செய்த அட்டன் வெலி ஓயா தோட்டத்தைச் சேர்ந்த இராணுவக் கழக வீரர் கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 1500 மீற்றர், 5000 மீற்றர் ஆகிய இரண்டு ஓட்டப் போட்டிகளிலும் தலவாக்கொல்லையைச் சேர்ந்தவரும் இராணுவக் கழக வீரருமான வி. வக்சன் முதலாம் இடங்களைப் பெற்றார், 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3:48.41 நிமிடங்களிலும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 14:47.35 நிமிடங்களிலும் நிறைவுசெய்து அவர் முதலாம் இடங்களைப் பெற்றார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷனரி தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. விஹாஸ் (47.64 மீ.) முதலாம் இடத்தைப் பெற்றார்.
இராணுவம் சார்பாக போட்டியிட்ட முன்னாள் ஹாட்லி வீரர் எஸ். மிதுன்ராஜ், ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியிலும் (47.47 மீ.), குண்டு எறிதல் போட்டியிலும் (15.73 மீ.) முதலாம் இடங்களைப் பெற்றார்.
ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக போட்டியிட்ட எஸ். பிராகாஸ்ராஜ் (46.34 மீ.) இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

18 வயதுக்குட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மன்னார் மவாட்டத்தைச் சேர்ந்த அருள்நாதன் கமில்டன் (6.86 ம.) 2ஆம் இடத்தைப் பெற்றார்.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் எஸ். டிரேஷ்மன் (31.27 மீ.) முதலாம் இடத்தைப் பெற்றார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்க வீராங்கனை நேசராச டக்சித்தா 3.40 மீற்றர் உயரம் தாவி முதலாம் இடத்தைப் பெற்றார்.