கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் திரிபோலி பெட்ரோன் ஊடாக இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் அடிக்கடி கூறியுள்ளேன். ஆனால் இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் இதுவரையில் நடக்கவில்லை. அரச புலனாய்வு அதிகாரிகள் இதில் தொடர்புபட்டிருந்தாக தெளிவாக கூறியிருந்தோம்.
அண்மையில் இடம்பெற்ற கணேமுல்லை சஞ்சீவ கொலை சம்பவத்தை தொடர்ந்து சாட்சியாளர்கள் பலர் சாட்சிகளை உங்களிடம் கூறி அதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினால் எங்களுக்கும் இதுவா நடக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மெனிக்பாமில் இருந்த 27 இளைஞர்கள் காத்தான்குடிக்கு கொண்டுவரப்பட்டு காத்தான்குடியில் கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டனர் என்று அதனுடன் தொடர்புபட்ட புலனாய்வு பிரிவினருடன் இருந்த வாகன சாரதியின் சாட்சியம் என்னிடம் வீடியோவாக உள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடந்த காலங்களில் இடம்பெற்ற சூழ்ச்சிகளை செய்த குழுக்களுக்கு பயப்படுகின்றதா? இவற்றை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன என்றார்.