மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். வலுசக்தி மாபியாக்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்கள் எடுக்கப்படும் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி மாபியாக்களை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (21) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த மேலும் குறிப்பிடுகையில்,
நாம் அமைச்சுப் பதவிகளை வகித்த போது, தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முரணாக செயற்பட்டால் அதற்கெதிராக அமைச்சரவையிலும் குரலெழுப்பியிருக்கின்றோம். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. திரவ எரிவாயு விலை மனு கோரல் தொடர்பில் இறுதியில் நாமே எமது அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம். இதனால் நாம் அமைச்சுப்பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டோம்.
எரிபொருள் மாபியாக்களே இலங்கையில் மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் ஆட்சி கவிழ்ப்பில் பெரும் பங்கினை வகிக்கின்றன. எவ்வாறிருப்பினும் எமது நாட்டிலுள்ள சூழலியல் நிபுணர்களுக்கு இவர்களை எதிர்ப்பதற்குள்ள தைரியம் பாராட்டுக்குரியது. வர்த்தகர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.
வலுசக்தி துறை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகளை மீட்டிப்பார்த்தால் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். மின்சார திருத்த சட்டத்தில் முன்னர் காணப்பட்ட ‘ஆகக்குறைந்த கட்டணம்’ என்ற சொல் ‘நியாயமான கட்டணம்’ என மாற்றப்பட்டுள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இதுவும் மாபியாக்களின் செயற்பாடே.
சூரிய மின்னுற்பத்தி கட்டமைப்பை ஒவ்வொரு பிரஜைகளும் சுயாதீனமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் இலங்கை மின்சாரசபையின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மின் துண்டிப்பு தொடர்பில் மின்சாரசபையால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் யாரையும் பாதிக்காது. எனவே மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்.