‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகவும், ‘கெத்து’ தினேஷ் ஆகவும் ரசிகர்களிடத்தில் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் ‘கருப்பு பல்சர்’ எனும் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு பல்சர் ‘ எனும் திரைப்படத்தில் ‘கெத்து’ தினேஷ், ரேஷ்மா வெங்கட், மதுனிகா , மன்சூர் அலிகான், கலையரசன், ஷரவணசுப்பையா, பிரின்ஸ் அஜய் , ‘பிராங் ஸ்டார்’ ராகுல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்திருக்கிறார். கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யசோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் வைத்தியர் எம். சத்யா தயாரித்திருக்கிறார்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” மதுரையில் கருப்பு வண்ண ஜல்லிக்கட்டு காளையுடன் வாழும் ஒரு இளைஞன்- சென்னையில் ‘பல்சர்’ எனும் துவி சக்கர வாகனத்துடன் வாழும் ஒரு இளைஞன்- இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்த தருணத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படத்தின் கதை. இதற்கு முன் நடிகர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது”என்றார் .
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்றும், அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
‘கெத்து’ திரைப்படத்திற்கு பிறகு தனக்கான சந்தையை உருவாக்கிக் கொள்வதற்கு கடுமையாக போராடி வரும் நடிகர் தினேஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றால் தான் தினேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்வார் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/274694/ci_6225_k_b.jpg)