நடிகர் ஜெயம் ரவி -நடிகை நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எனும் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவர் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பொலிவுட் திரையுலகின் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் ‘ஜவான்’ எனும் இந்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு, நடிகை நயன்தாரா புதிதாக தற்போது இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத ஒரு படத்திலும், இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகவிருக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்குப் பிறகு கொமர்ஷல் படம் மற்றும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் என இரண்டு படங்களை தெரிவு செய்து நடிக்கவிருக்கும் நயன்தாராவின் அணுகுமுறையை திரையுலகினரும், அவரது ரசிகர்களும் பாராட்டுகிறார்கள்.