அமெரிக்க பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்தார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப்பாடசாலையில் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பாடசாலை சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த கொடூர இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பாடசாலை சிறுவர்கள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை பொலிஸார் சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெக்சாஸ் பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பாடசாலை இன்று சென்றார்.
பாடசாலை வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைந்துள்ள நினைவிடத்தில் அவர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார்.
டெக்சாஸ் படுகொலை: கண்ணீருடன் நேரில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!
அதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த ஜோ பைடன், அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனை செய்தார்.
அவர் தேவாலயத்தில் இருந்து வெளியே வரும்போது அந்த தெருவில் நின்று இருந்த பொதுமக்கள் “ஏதாவது செய்யுங்கள்” என அவரை நோக்கி கூச்சலிட்டு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிபர் பைடன் ” நிச்சயமாக , நிச்சயமாக” என தெரிவித்தார்.