சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வலிந்துகாணாமலாக்கப்படல் என்பது மனிதகுலத்திற்கு எதிரானது என்பதுடன் சர்வதேச குற்றமாகவும் கருதப்படுகின்றது. அதுமாத்திரமன்றி வலிந்துகாணாமலாக்கப்படலானது அரசியலமைப்பின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமையையும் சர்வதேச பிரகடனத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமையையும் மீறுவதாக அமைந்துள்ளது.
அதன்படி சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இம்மாதம் 25 – 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகளும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்படவிருப்பதாக காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் அதிகளவிலான காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் இன்னமும் வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான உண்மையும் நீதியும் உறுதிசெய்யப்படாத நிலையில், இவ்வாரம் இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.