பணிபுரிந்த அனைத்து இடங்களிலும் உடன் பணிபுரிந்தோர் இவரை ஆண் எனக் கருதி முத்து மாஸ்டர் என்றும், அண்ணாச்சி என்றுமே அழைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள்.. 20 வயதில் திருமணம் நடந்து, 15 நாட்களில் கணவரை மாரடைப்புக்கு பறிகொடுத்து கைம்பெண் ஆனவர். ஆனால் அதற்குள் கரு உண்டானது. மீண்டும் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தார் வற்புறுத்தியும் பேச்சியம்மாளுக்கு அதில் உடன்பாடு இல்லை. பேச்சியம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது.
குடும்பத்தை கவனித்துக்கொண்டு பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதையே அன்றைய சமூகம் எதிர்பார்த்தது. அந்த வளையத்துக்குள் சிக்க விரும்பாத பேச்சியம்மாள், ஆண்களின் தொல்லையில் இருந்து தப்பவும் தன் அடையாளத்தையே மாற்றும் புதுமையான ஒரு முடிவை மேற்கொண்டார். தலையை மொட்டையடித்து சிகை அலங்காரத்தை ஆண் போல் மாற்றினார். ஆண்கள் அணியும் ஆடைகளை தளர்வாக அணிய தொடங்கியதுடன் பெயரையும் முத்து என மாற்றிக் கொண்டார்.
ஆண் அடையாளத்தை சுமந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள முடிந்ததாக கூறுகிறார்.
ஹோட்டல், டீக்கடை, பெயின்டிங் மற்றும் கடினமான கூலி வேலையாக இருந்தாலும் பேச்சியம்மாள் பழகிக்கொண்டார். பணிபுரிந்த அனைத்து இடங்களிலும் உடன் பணிபுரிந்தோர் இவரை ஆண் எனக் கருதி முத்து மாஸ்டர் என்றும், அண்ணாச்சி என்றுமே அழைத்தனர். தற்போது முத்து என்ற பெயரிலேயே ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.
பேருந்து தொடங்கி கட்டண கழிப்பிடம் வரை அனைத்தும் ஆண்கள் வரிசையில் தான். 30 ஆண்டுகளுக்கும் மேல், யாருக்கும் சந்தேகமும் எழாதபடி தன் அடையாளத்தை பாதுகாத்து, தான் நினைத்தபடியே மகளை படிக்க வைத்து மணமுடித்தார்.
தனது வாழ்நாளில் மிகுந்த சிரமங்களை அனுபவித்துவிட்டார் இந்த திருமதியாகிய முத்து மாஸ்டர். தற்போது ஐம்பத்தி ஏழு வயது ஆகிவிட்டது. முன்பு போல் உடல் ஒத்துழைக்கவில்லை.. ஆனால் ஆதார் அட்டையில் முத்து என்ற ஆண் அடையாளத்தை சுமந்து இருப்பதால் இவருக்கு உதவித்தொகை எட்டாக் கனியாக மாறியுள்ளது.
தன் அடையாளத்தை பேச்சியம்மாள் கலைவித்துவிட்டாலும் அரசாங்க அடையாளப்படி ஆணாக கருதப்படுகிறார். முதுமையையும், ஏழ்மையையும் கருதி முதியோர் உதவித்தொகை வழங்க அரசு முன்வருமா? என எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.