உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவருக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததன் பின்னரே இவ்வாறான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது சேவையாற்றிய புலனாய்வு பிரிவினரை இலக்கு வைக்கின்றனர். புலனாய்வு பிரிவினரால் தகவல்களை மாத்திரமே வழங்க முடியும். மாறாக ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்த முடியாது.
குண்டு வெடிப்பதற்கு முன்னரும் கூட நிலாந்த ஜயவர்தன பொலிஸாருக்கு அதுகுறித்த தகவல்களை வழங்கினார்.
ஆனால் அவருக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்று தீவிரவாதிகளை தாக்க முடியாது. சஹானுடைய தொலைபேசி பாகத்தை (Mother Board) யார் எடுத்தது என்பது தொடர்பில் எவரேனும் கருத்து தெரிவித்தார்களா ?
இந்த தொலைபேசி பாகத்தை எடுப்பதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் , அதனை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனையே முதலில் ஆராய வேண்டும். அது தொடர்பில் ஆராய்ந்தால் மாத்திரமே பிரதான சூத்திரதாரிகளை இனங்காண முடியும்.
அதனை விடுத்து முன்னாள் ஜனாதிபதியையும் , அமைச்சர்களையும் குறைகூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
அத்தோடு அவருக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததன் பின்னரே இவ்வாறான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.