பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற 35 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பெங்களூரு அணியை பணித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு, விராட் கோஹ்லி மற்றும் தேவ்தூத் படிக்கலின் வலுவான ஆரம்பத்தினால் முதல் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 103 ஓட்டங்களை குவித்தது.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 180 ஐ கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 13.2 ஆவது ஓவரில் விராட் கோலியின் (53) ஆட்டமிழப்பும், அவரையடுத்து வந்த அதிரடி ஆட்டநாயகன் ஏ.பி.டி.வில்லியர்ஸ் (12), தேவ்தூத் படிக்கல் (70) ஆகியோரின் ஆட்டமிழப்புக்கள் பெங்களூரு அணியின் தலை எழுத்தனை மாற்றியமைத்தது.
தொடர்ச்சியாக களமிறங்கிய வீரர்கள் ஓட்டங்களை குவிக்க முடியாது ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்து நடையை கட்ட இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது பெங்களூரு.
157 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னைக்கு ஆரம்ப வீரர்களின் வலுவானதும், அதிரடியானதும் இணைப்பாட்டம் கைகொடுத்தது.
அதன்படி ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டூப்பிளஸ்ஸி மற்றும் ருதுராஜ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 71 ஒட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
8.2 ஆவது ஓவரில் சஹலின் பந்து வீச்சில் ருதுராஜ் 38 ஓட்டங்களுடன் விராட் கோலியிடம் பிடிகொடுக்க, 9.1 ஆவது ஓவரில் டூப்பிளஸ்ஸி 31 ஓட்டங்களுடன் மெக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் சைனியிடம் பிடிகொடுத்தார்.
தொடர்ச்சியாக களமிறங்கிய மொய்ன் அலி 23 ஓட்டங்களுடனும், அம்பத்தி ராயுடு 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேற, சென்னை அணி 133 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக சென்னையின் இரு பலம் தூண்களான சுரேஷ் ரய்னா மற்றும் தோனி கைகோர்த்தாட 18.1 ஆவது ஓவரில் வெற்றியை பதிவுசெய்தது சென்னை.
ஆடுகளத்தில் ரய்னா 17 ஓட்டங்களுடனும், தோனி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 7வெற்றிகளுடன் மொத்தமாக 14 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்துக் கொண்டது.
இது இவ்வாறிருக்க இன்றைய தினம் ஐ.பி.எல்.தொடரில் இரு போட்டிகள் அரங்கேறவுள்ளன.
36 ஆவது லீக் ஆட்டம் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு இடையிலும், 37 ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலும் நடைபெறவுள்ளன.
Photo Credit ; IPL
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]