பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டங்கள் குறித்த பிரஸ்ஸல்ஸ் பத்திரிகைக் கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் அந்தச் சட்டமானது இனச் சுத்திகரிப்புக்குச் சமம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமியம் மற்றும் பாகிஸ்தானின் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மத உணர்வுத்திறன் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான நிந்தனைச் சட்டங்கள் பொலிஸ் மற்றும் நீதித்துறையால் தெளிவற்ற முறையில் வடிவமைக்கப்பட்டு தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகின்றன.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் படுமோசமான முறையில துன்புறுத்தப்படுவதுடன் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
ஆனால், இதுபோன்ற நிலைமைகள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டுள்ளதாகவும் அந்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான சட்டங்களை ரத்து செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தெய்வ நிந்தனை சட்டத்தின் அடிப்படையிலான இன அழிப்பை நியாயப்படுத்த சட்டங்களின் பயன்பாடு மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
விவாதத்தைத் தொடங்கி வைத்த முன்னாள் தெற்காசிய ஜனநாயக மன்றத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பணிப்பாளர் பாலோ காசாடா கூறுகையில் , இது மிக முக்கியமான தலைப்பு மாத்திரமல்ல நீண்ட காலமாக கையாளப்படுகின்ற விடயமும் ஆகும்.
எந்தவொரு அடித்தளமும் இல்லாமல் மக்கள் நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றனர். இந்த சிக்கலை முன்னிலைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் அதிகம் விடயங்களை கையாள்வது மாத்திரன்றி செயற்படவும் வேண்டும் கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஐரோப்பிய மக்கள் கட்சியின் சர்வதேச விவகார ஆலோசகர் மானெல் மல்சாமி இதன் போது கூறுகையில் , பாகிஸ்தானில் இடம்பெறும் துன்புறுத்தல்களை எமது பாராளுமன்றம் உட்பட பல அமைப்புகள் கண்டித்துள்ளன.
இந்த சட்டங்களின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டங்கள் எப்போதுமே ஒரு பிரச்சனையாகவே உள்ளதுடன் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகின்றன.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத சிறுபான்மையினருக்கு எதிராக இத்தகைய சட்டங்கள் கடுமையாக பயன்படுத்தப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மறுப்புறம் முஸ்லீம் நாடுகளில் இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்த பாகிஸ்தான் அழைப்பும் விடுத்துள்ளது. இது மிக மோசமான நிலைமையை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார்.
மற்றொரு முக்கிய பேச்சாளரான எல்லைகள் இல்லாத மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் வில்லி ஃபாட்ரே குறிப்பிடுகையில் , மத நிந்தனை சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்த 47 வழக்குகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இவர்களில் 26 கிறிஸ்தவர்கள், 15 சுன்னி முஸ்லிம்கள், 5 அஹ்மதிகள் மற்றும் 1 ஷியா முஸ்லிம் உள்ளதாக குறிப்பிட்டார்.
16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 பேர் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
நான்கு வழக்குகளில் கைதியின் நிலை தெரியவில்லை. 2010 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபியின் வழக்கில் மரண தண்டனைக்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் பல ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுவித்ததாகவும் தெரிவித்தார்.