முள்ளிவாய்க்கால் பகுதியில் இரும்புப் பெட்டகம் ஒன்றை விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து அவ்விடத்தில் நேற்று பிற்பகல் அகழ்வுப் பணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.இந்த இரும்புப் பெட்டகத்திற்குள் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இரும்புப் பெட்டகம் ஒன்றை நிலத்தில் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது இந்த நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய கனரக வாகனம் ஒன்றும் அப்பொழுது அவ்விடத்தில் புதைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் புலிகள் இரும்புப் பெட்டகப் புதையலின் அடையாளமாக புதைந்திருக்கும் கனரக வாகனம் தற்பொழுது காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் புதைக்கப்பட்ட இரும்புப் பெட்டகத்தை தேடும் முயற்சியில் இன்று பிற்பகல் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் மேற்கொண்டிருந்தனர்.
சுமார் 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது அவ்விடத்தில் இருந்து எந்தவொரு பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.