நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘திட்டம் இரண்டு’ படத்தின் எடிட்டர் சி. எஸ். பிரேம்குமாருக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைக்கும் என விமர்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரபல படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர் சி எஸ் பிரேம்குமார். பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ என்ற படத்திற்கு தன் குருவுடன் இணைந்து படத்தொகுப்பு செய்தவர்.
‘நேற்று இன்று நாளை’ என்ற திரைப்படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமான சி. எஸ். பிரேம்குமார், ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’, ‘ v1’, ‘ஹவுஸ் ஓனர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
இவருடைய படத்தொகுப்பில் வெளியான திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபற்றி பல விருதுகளை வென்றிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதை என்றால் இயக்குனர்கள் தங்களது படத்தை தொகுக்க எடிட்டர் சிஎஸ் பிரேம் குமாரை தெரிவு செய்வது வழக்கமாகிவிட்டது.
இதனால் தமிழ்த் திரையுலகில் பரபரப்பான படத்தொகுப்பாளராக சி எஸ் பிரேம்குமார் வளர்ச்சியடைந்து வருகிறார். இவர் தற்போது ‘ராஜா மகள்’, ‘ரூம்’, ‘ராஜாவுக்கு ராஜாடா’ என பல படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரது படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் ஜூலை மாதம் 30ஆம் திகதியான இன்று வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் ஜேனரில் உருவான இந்தப் படத்தை தொடக்கம் முதல் உச்சகட்ட காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பான முறையில் திரைக்கதையை நகர்த்திச் சென்றிருப்பதில் எடிட்டர் சி.எஸ். பிரேம்குமாரின் உழைப்பு பளிச்சிடுகிறது என்றும், இவரது படத்தொகுப்பில் திரைக்கதையை யாரும் யூகிக்க முடியாத வகையில் கச்சிதமாக தொகுத்திருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள். அத்துடன் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதை சி எஸ் பிரேம்குமார் பெறுவார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.