ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை ரத்துசெய்தது மத்திய அரசு. மேலும், சிறுபான்மையினரை முன்னேற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரத்துசெய்யப்படுவதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 1.75 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து ஓர் ஆண்டுக்கு 1.70 லட்சம் பேர் மட்டுமே ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான ஒதுக்கீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹஜ் யாத்திரைக்கான கொள்கைகளை வடிவமைப்பதற்கு, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹஜ் மானியம் ரத்துசெய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.