ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திறகு விஜயத்தை மேற்கொண்ட பஷில் ராஜபக்ஷ, நல்லூர் ஆலயத்திற்கு அவரது குழுவினருடன் இன்று முற்பகல் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றிலும் கலந்துகொண்டு உரையாற்றிய பஷில் ராஜபக்ஷ, நல்லை ஆதீனத் தலைவர், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில் கூட்டத்தின் நிறைவில் அங்கிருந்த பொதுமக்களுடனும் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே பஷில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக பஷில் ராஜபகஷ நேற்றையதினம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் கட்சிப் பணிகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.