வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள கடைத் தொகுதியொன்றில் இன்று அதிகாலை 1.30 அளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் இரு கடைகள் முழுமையாக தீக்கிறையாகியுளதாகவும், மேலும் சில கடைகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவுவதைக் கவனித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஒலி பெருக்கியின் மூலம் சம்பவம் குறித்து அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊர்மக்கள்
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த போதிலும், தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. பின்னர் சம்பவம் குறித்து வவுனியா நகர சபை தீயணைப்பு பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்பு பிரிவினர் உடனே தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் “இதுவொரு விசமிகளின் செயற்பாடு” என குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் நடைபெற்ற நேரத்தில், இரண்டு நபர்கள் அந்த இடத்திலிருந்து இருவேறு பக்கமாக ஓடுவதனை சிலர் கவனித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த வர்த்தக நிலையங்கள் சட்டவிரோதமானவை என அண்மையில் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட வர்த்தக நிலையங்களே இவ்வாறு தீக்கிறையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.