சதாரணமான கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராத ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை தரப்போகின்றார்களா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் மட்டக்களப்பு செட்டிபாளையத்தி அமைந்துள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை(24) மாலை நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான விடயம் இப்போது படிப்படியாக சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழர்கள் பலவிதமாக சிந்தித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் பலவிதமான கேள்விகளையும் எங்களை நோக்கி வருகின்றன.
அந்த வகையில் கடந்த காலத்தில் 8 ஜனாதிபதி தேர்தலிலும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து இருக்கின்றோம். அது விருப்பமாக இருக்கலாம், விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், முதல் தடவையாக தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற சிந்தனையை 83 சிவில் சமூக கட்டமைப்புகள் கொண்டு வந்திருக்கிறது. அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை களத்தில் இறக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் இதனோடு தமிழ் தேசியக் கட்சிகள் ஏழு கட்சிகள் பயணிப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இதேவேளை கட்சி அரசியலுக்கு அப்பால் இப்போது இலங்கை தமிழரசுக் கட்சி இன்னும் முடிவு சொல்லவில்லை. என்றாலும் யாரையும் எதிர்க்கின்ற தன்மையை அவர்கள் ஏற்படுத்தி கொள்ளவில்லை.
யாரை ஆதரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக முடிவெடுக்கவில்லையே தவிர யாரையும் எதிர்க்கச் சொல்லி அவர்கள் முடிவு சொல்லவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் பரப்புரைகள் நடைபெறுகின்றன என்றார்.