வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கோரிக்கை விடுத்துள்ளார்
நாடாளுமன்றில் நேற்று (07) உரையாற்றிய போதே அமைச்சரும், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவிடம் (Bimal Rathnayake) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இறந்தவர்களை நினைவு கூருதல் என்பது அந்தந்த சமயங்களுக்கேற்ப மக்கள் செய்து வருவது வழமையாகும்.
முள்ளிவாய்க்காலிலும் நினைவு
எங்களுடைய மக்கள் வடக்கு, கிழக்கில் நினைவுநாளாக நவம்பர் 27 அன்று துயிலுமில்லங்களிலும் மே 18 அன்று முள்ளிவாய்க்காலிலும் நினைவு கூருவார்கள்.

கடந்த வருடம் உங்களுடைய ஆட்சியில் தடைஇல்லாமல் உணர்வுபூர்வமாக நவம்பர் 27 நாளினை நிம்மதியாக நினைவு கூர்ந்தார்கள். துயிலுமில்லங்கள் சிலவற்றில் இராணுவத்தினர் இருக்கின்றார்கள்.
இராணுவத்தினர் எண்ணிக்கையும் வடக்கு, கிழக்கில் அதிகமாகவும், முல்லைத்தீவில் இன்னும் அதிகமாகவும் இரண்டு மக்களுக்கு ஒருபடையினர் என்று உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
துயிலுமில்லங்களையும் விடுவியுங்கள்
மக்கள் தங்களுடைய உறவுகளை எண்ணி நினைத்து, ஒரு செட்டுக்கண்ணீர் சிந்தி, தமது மனத்தை ஆறுதல் படுத்துவதற்கு, இராணுவம் அத்துமீறி கையகப்படுத்திவைத்துள்ள முள்ளியவளை, அளம்பில், தேராவில்,ஈச்சங்குளம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கிலுள்ள இன்னும் சில துயிலுமில்லங்களையும் விடுவியுங்கள்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சார்பாக இந்தக் கோரிக்கையினை முன்வைப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.