மண்ணெண்ணெய் விலையினை குறைத்தால் வடக்கில் மீன் விலைகளை குறைக்க முடியும் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நேற்று(14.09.2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய சந்திப்பில் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கியமான மூன்று பிரச்சினைகளை நாங்கள் கலந்துரையாடினோம்.
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

தற்காலத்தில் கடற்தொழில் சமூகம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றது. அதேபோல இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையினால் கடற்தொழில் சமூகம் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.
இதேவேளை கடற்தொழில் சமூகத்திற்கு பாதகமான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன, அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் இன்றைய கலந்துரையாடலில் நாங்கள் பேசி இருக்கின்றோம்.
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரண்டு இலட்சம் மீனவ மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளால் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை கைவிட்டு செல்கின்ற நிலைமையை நாம் உணர்கின்றோம். அது ஒரு கவலையளிக்கின்ற விடயமாகும்.
அதிக விலைக்கு மீன் விற்பனை

மேலும் வடமாகாணத்தில் இருக்கின்ற மக்கள் கடற்தொழில் சமூகத்திற்கு மண்ணெண்ணெய் கிடைக்கின்றது. ஆனால் மீன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என கவலை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
கடந்த காலத்தில் 87 ரூபாவிற்கு எரிபொருள் விற்பனை செய்த போது தொழில் இலகுவாக செய்ய முடிந்தது. குறைந்த விலையில் மக்களுக்கு மீன் விற்பனை செய்யக்கூடியதாகவும் இருந்தது.
ஆனால் தற்போது விலை அதிகரிப்பின் ஊடாக எங்களுக்கு 20 லீட்டர் மண்ணெண்ணெய் எடுத்து தொழில் செய்வதற்கு அண்ணளவாக ஒன்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது.
ஆனால் பிடிக்கப்படுகின்ற மீன் ஏழாயிரம் ரூபாய்வரை தான் விற்பனை செய்யப்படுகின்றது. நமது முதலைக் கூட பெற முடியாத நிலை காணப்படுகின்றது. எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் கவலைக்குரியதாக காணப்படுகின்றது.
கடற்தொழிலாளர்கள் பிரச்சினை

இதனால் குறைந்தளவு தொழிலாளர்கள் மாத்திரமே தொழிலுக்கு செல்கின்றார்கள். அதிகளவான கடற்தொழிலாளர்கள் வேறு தொழில்களில் அதிக நாட்டம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
எமக்கு எரிபொருள் குறைந்த விலையில் பெறுவதற்கு அனைவரது ஒத்துழைப்பு மிக அவசியமாகும். அந்த ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் எதிர்காலத்தில் மீனின் விலை குறைத்து விற்பனை செய்ய முடியும்.
இரண்டு வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் புயல் தாக்கத்தின் போது பாதிக்கப்பட்ட கடற்தொழில் குடும்பங்களுக்கு இன்னமும் இழப்பீடு உதவிகள் சென்றடையவில்லை. அந்த இழப்பீடுகள் எமக்கும் கிடைக்கவில்லை. இது வடக்கு மக்களுக்கு பெரும் கவலை அளிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.