21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட தொலைக்காட்சி நடிகையான 21 வயதுடைய சேத்தனா ராஜ் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்வதற்காக நேற்று காலை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது சேத்தனா சுயநினைவை இழந்ததால் அவருக்கு அவசர உதவியை மருத்துவர்கள் அளித்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேத்தனா மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது.
பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சேத்தனா சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அவருடைய மரணத்திற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையும், அலட்சியமுமே காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சேத்தனாவின் திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இவரின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.