ஈரோடு மாநாட்டுக்கு பிறகு தொண்டர்களின் புகார் கடிதங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட வாரியாக கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 1, 3–ந் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
3–வது நாளாக நேற்று ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகிகளுடனும், கட்சியின் துணை அமைப்புகளான இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துகளை கேட்டார்.
ஆலோசனை கூட்டத்தின் போது, உள்ளாட்சி, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது எப்படி? அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி? கட்சி வளர்ச்சி பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதிய உணவின்போது, கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் பிரச்சினைகளுக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் அளிக்கும் புகார் கடிதங்கள் யார் மீது புகார் கூறப்படுகிறதோ அவர்களின் கைக்கு நிச்சயமாக செல்லாது.
அதே நேரத்தில் பொய் புகார் கூறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். ஈரோட்டில் அடுத்த மாதம் மாநாடு நடக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு புகார் கடிதங்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் தேர்தலுக்கு தயாராகுங்கள். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 5 இளைஞர்கள், 5 இளம்பெண்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.