பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நோட்ரே டேமில் பொலிசார் மீது மர்ம நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Notre Dame பகுதியில் மர்ம நபர் ஒருவர் உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணி அளவில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.
இத்தாக்குதலை அவன் சுத்தியல் மற்றும் கத்தியை வைத்து நடத்தியதாக கூறப்படுகிறது.
மர்ம நபர் நடத்திய தாக்குதலில் இரண்டு பொலிசாருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின் போது பொலிசார் நடத்திய எதிர்தாக்குதலில் குறித்த மர்ம நபர் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டார்.
திடீரென்று மர்ம நபர் நடத்திய தாக்குதலால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். இதையடுத்து பாரிஸ் நகர் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு பொலிசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் இது குறித்து பொலிசார் ஒருவர் தெரிவிக்கையில், தாக்குதல் நடத்திய நபரால் இரண்டு பொலிசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஒரு பொலிசாருக்கு மார்பில் சிறிய அளவிலான காயம் என்றும் மற்றோரு பொலிசாருக்கும் சிறிய காயம் தான் என்று தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும், நீங்கள் இருக்கும் பகுதியிலே இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பொலிசார் அங்குள்ள தேவலாயத்தில் சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கையை உயர்த்திய படி இருந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பொலிசார் தேவாலயத்தில் இருக்கும் அனைவரும் கையை உயர்த்துங்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் கையை உயர்த்துகின்றனர். அதன் பின் பொலிசார் அங்கு சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது..
தாக்குதல் நடத்திய நபர் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.