யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் அதிசய வீடொன்று கடலில் மிதந்த வந்துள்ளது.
இந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றிரவு யாழ். பருத்தித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் கடலில் எப்போதும் காணக் கிடைக்காத காட்சியொன்றைக் கண்டுள்ளார்.
அதாவது கடலில் ஒரு அழகிய வீடொன்று மிதந்து வரும் காட்சியே அது. குறித்த காட்சியைக் கண்ட மீனவருக்கு முதலில் ஒரு வித அச்சம் நிலவினாலும் பின்னர் தமக்குள் துணிவை வரவழைத்துக் கொண்டு அதனருகே சென்று பார்த்துள்ளார்.
எமது நாட்டில் இல்லாத வித்தியாசமான நுட்ப முறைகளுடன் அமைந்திருந்த குறித்த மூங்கில் வீடு அவரை மிகவும் ஈர்த்துள்ள நிலையில் அதனை மீட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.
தாய்லாந்து நாட்டவர்கள் தமது மூதாதையருக்குப் பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வகையிலான வீடொன்றை உருவாக்கிக் கடலில் மிதக்க விடுவது அவர்களின் மரபாகவுள்ள நிலையில் அவ்வாறானதொரு வீடே குறித்த வீடு எனத் தெரியவருகிறது.
தற்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த அதிசய வீட்டைப் பார்வையிட ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.