அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்கு தீ வைக்காமல் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு நீர்கொழும்பில் தம்பதியர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்கொழும்பில் வசிக்கும் குறித்த தம்பதிகளின் வீடு சூறையாடப்பட்டதுடன், தங்க நகைகள், ஆடைகள், புத்தகங்களுடன் கூடிய பாடசாலைப் பைகள் என்பன திருடப்பட்டதுடன், நாட்டில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது குறித்த வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் தாங்கள் பங்குகொண்டதாகத் தெரிவித்த தம்பதியினர், இந்த பிரச்சினைக்கு வன்முறை தீர்வாகாது எனவும் தெரிவித்தனர்.
வீடுகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தி, பல குழந்தைகளை கடுமையாக பாதித்துள்ளதால், குழந்தைகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
எந்த அரசியல்வாதிகளுடனும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்திய தம்பதியினர், நாம் என்ன தவறு செய்தோம் எனவும் கேள்வி கேட்கின்றனர்.
குறித்த நபர் ஒரு மதப் போதகர் என்றும் தாங்கள் மிஷனரி சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தள்ளனர்.
அமைதி வழி ஆர்ப்பாட்டத்தின் மீது அரச ஆதரவாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் பல வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு நேற்றிரவு தீ வைத்தனர்.
கொழும்பில் நேற்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.