நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயஎச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப் பதாக அனர்த்த முtகாமைத்துவ மத்திய நிலை யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேறுமாறும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றத்தால் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது.
அதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள்100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளது. குறித்த மழைவீழ்ச்சியானது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்ககூடும் என்பதால் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்ட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, புளத்சிங்கள, பாலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும், காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குமே இவ்வாறு மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிவித்தலானது நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணிமுதல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
மண்சரிவு ஏற்படும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலவும் மழை காலநிலை தொடர்ந்தால் நிலச்சரிவு, பாறைகள் இடிந்து விழுதல், நிலத்தாழ்வு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே அங்கு மலைப்பாங்கான பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.
மரங்கள் அல்லது கம்பங்கள் முறிந்துவிழும் அபாயம், நிலம், சுவர், அல்லது கட்டடங்களில் ஏதேனும் வெடிப்புக்கள் ஏற்படுதல், நிலத்திலிருந்து திடிரென நீருற்றுக்கள் மற்றும் சேற்று நீர் ஊடுறுதல் உள்ளிட்ட மண்சரிவு அபாய அறிகுறிகள் காணப்படுமாயின் மக்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறவேண்டும்.
அத்துடன் மேக மூட்டத்துடனான காலநிலை தொடரும் சந்தர்ப்பங்களின் போது குறித்த பிரதேசங்களுக்கு பயணிக்கும் வாகனசாரதிகளும் முன் எச்சரிக்கையான முறையில் நடந்துகொள்ளவேண்டும்.