பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கு விரைந்துள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அ.தி.மு.க-வில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ஓ.பி.எஸ் போர்கொடி, சசிகலா சிறை, எடப்பாடி ஆட்சி, ஆர்.கே.நகர் வேட்பாளர் டி.டிவி தினகரன், டி.டி.வி தினகரன் கைது, கட்சியில் இருந்து தினகரன் விலகல் என பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜாமீனில் இருந்து வெளிவந்த தினகரன், கட்சிப் பணியை தொடர்வேன். கட்சியை விட்டு என்னை யாரும் நீக்கவில்லை. என்னை நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்று கூறினார்.
சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு ஆட்சி செய்வோம் என்ற சொன்ன அமைச்சர்களே இந்த விவகாரத்தில் வெவ்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தினகரனை அமைச்சர்கள் சந்திக்க மாட்டோம், தினகரன் கட்சிப் பணி தொடர்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார் ஒரு சில அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சில அமைச்சர்களோ கட்சிப் பணியை தொடர தினகரனுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக எம்.எல்.ஏ-க்கள் தங்கதமிழ் செல்வன், கதிர்காமு, ஜக்கையன் ஆகியோர் பெங்களூரு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல வெற்றிவேல் உட்பட சில எம்.எல்.ஏ-க்கள் இன்று பெங்களூரு செல்ல உள்ளதாகவும் அ.தி.மு.க அம்மா அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.