அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது விசேட கூட்டமொன்றின் ஊடாக கண்டறியவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரன், வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழு நேற்று ஜனாதிபதியைச் சந்தித்தது.
இச் சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகள் ஏன் விடுவிக்கப் படவேண்டும் என்பதற்கான பல காரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடமாதலால் இது அரசியல் ரீதியாக எதிர்நோக்க வேண்டும் என கூட்டமைப்பு இச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.
அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்றது. அவர்களுக்கு எதிராக தாமதம் இல்லாமல் தண்டனை வழங்கியிருந்தால் தற்போது தண்டனைக் காலம் நிறைவேறி வெளியே வந்திருப்பார்கள்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பலருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்றஒப்புதல் வாக்கு மூலமே அவர்களுக்கெதிரான சாட்சியமாக இருக்கிறது.
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இப் புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சாட்சியமாக முடியாது. இந்தச் சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதும் இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
1971ஆம் ஆண்டும் 88,89,ஆம் ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள், அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பலர் விடுவிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்பு முன்னைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய 12,000 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால், இந்தக் கைதிகளை தொடர்ந்தும் சிறையிலடைத்து வைத்திருப்பது நியாயமற்றது. அவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சிறைக் கைதிகள் சிறையில் உண்ணாவிரதமிருந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியமையும், பொது அமைப்புக்களும்,மக்களும்,பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடத்தி வரும் போராட்டங்களும் தமிழ் மக்களது உணர்வுகளையே பிரதிபலிக்கின்றன.
கைதிகள் தமிழர்களாக இருப்பதாலேயே அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறது என்பதே தமிழ் மக்களின் கருத்தாகவுள்ளது. இது நல்லிணக்கத்துக்கு பாதகமானது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச் சந்திப்பில் வலியுறுத்தியது. இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அடுத்த வாரம் பிரதமர், சட்ட மாஅதிபர், மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து இந்த விடயத்தை சாதகமாக அணுகி கைதிகளின் விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பதை முடிவு செய்வதாக மேற்படி கூட்டத்தில் உறுதியளித்துள்ளாரென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.