சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி வருமாறு:–
மனதோடு பேசுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி, வானொலியில் பேசியதை தொகுத்து, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்வை எப்படி எதிர்கொள்வது, கவனத்தை ஒருமுகப்படுத்தவும், அதிகப்படுத்தவும், யோகா போன்றவை இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களும் இந்த புத்தகத்தை பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் தெரிவித்தேன். குறிப்பாக இந்த புத்தகம் 11, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தேன்.
அதற்கு அவர் இது நல்ல யோசனை என தெரிவித்தார். காணொலியின் மூலம் இந்த புத்தகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புத்தகம் மாணவர்களுக்கு உந்துதலை தரும்.
தமிழை உயர்த்திப் பிடிப்பதில் பா.ஜ.க.விற்கு அக்கரை உள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையைப் பொறுத்தவரையில், தமிழக அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழை வியாபாரத்துக்காக வைத்துக்கொண்டு, தங்கள் பள்ளிகளில் கூட தமிழைக் கற்றுக்கொடுக்காமல் இருப்பவர்கள், இருக்கைக்காக பணம் கொடுத்துவிட்டால் தமிழ் பற்று அதிகமானவர்கள் என்று கருத முடியாது. கருணாநிதி, உதயநிதி அவர்கள் நிதி கொடுக்கலாம். இரட்டை நிலை எங்களுக்கு கிடையாது. நிதி கொடுத்தால் தமிழ்ப் பற்றாளர்கள் என்றும் நிதி கொடுக்காதவர்கள் பற்றாளர்கள் இல்லை என்றும் கருதக்கூடாது.
எம்.பி. தேர்தலுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.