பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர், மருத்துவ பரிசோதனைகளை முடிந்துள்ளார். இந்நிலையில் இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுகளை நடத்தவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 28ஆம் திகதி தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று அரசு கூறியிருந்தது.
நியூயோர்க்கிலுள்ள பிரெஸ்பைரேரியன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு உச்சிமுதல் உள்ளங்கால் வரை முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் மருத்துவமனையில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். அவரது உறக்க நிலையும், உணவுப் பழக்க வழக்கமும் கண்காணிக்கப்பட்டன.
இந்த மருத்துவப் பரிசோதனைகளில் முடிவடைந்துள்ள நிலையில் நியூயோர்க்கில் தங்கியுள்ள பிரதமர், ஐ.நா. சமுத்திரங்கள் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
அத்துடன், ட்ரம்ப் அரசின் செல்வாக்குமிக்க பிரமுகர்களையும் அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.