ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் ஜனாதிபதியை, கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்று தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர். அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி , அங்கு மலர் அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மல்வத்து – அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, திலும் அமுனுகம, குணதிலக ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
