குருநால் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் 26 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாளாக நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் இரண்டு வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
இலங்கையின் எதிர்கால வீரர்களை இனங்காணும் பொருட்டும் பிறமாவட்டங்களில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இப் போட்டியில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் தலைமையிலான வட மாகாணத்துக்கு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றை முன்கள வீரர்கள் வீணாக்கினர்.
அத்துடன் வட மாகாண அணி வீரர்கள் மிக நெருக்கமாக விளையாடியதால் அவ்வணியின் பந்து நகர்வுகள் முறையாக அமையவில்லை.
மறுபுறத்தில் எம்.எம்.எம். ஷிபான் தலைமையிலான சப்ரகமுவ மாகாண அணியும் அவ்வப்போது கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகளும் கைகூடாமல் போயின.
போட்டியின் 90ஆவது நிமிடத்தில் வட மாகாண வீரர் ஏ. அனக்லிட்டாஸ் மிகவும் முரட்டுத்தனமாக விளையாடியதால் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
இப் போட்டியில் இரண்டு அணிகளையும் சேர்ந்த 5 வீரர்கள் மஞ்சள் அட்டைக்கு இலக்காகினர்.
மற்றொரு வெற்றிதோல்வியற்ற முடிவு
இரவு மின்னொளியில் நடைபெற்ற மேல் மாகாணத்துக்கு எதிரான போட்டியை 89ஆவது நிமிடத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் தென் மாகாணம் சமப்படுத்திக்கொண்டது.
மேல் மாகாண அணியில் தேசிய வீரர்கள் பலர் இடம்பெற்றதால் அவ்வணி கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் மாகாண அணி வீரர்கள் திறமையாக விளையாடி அவ்வணிக்கு பெரும் சவாலாக விளங்கினர்.
போட்டியின் 16ஆவது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து தாழ்வாக பரிமாறப்பட்ட பந்தை நோக்கி ஓடிய மொஹமத் ஹஸ்மீர் மிகவும் லாவகமாக கோல் போட்டு மேல் மாகாண அணியை முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின் போது மேல் மாகாணம் 1 – 0 என முன்னிலையில் இருந்தது.
போட்டியின் 88ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம்புகுந்த பி.ஆர்.எச்.எஸ். சச்சித் மறு நிமிடமே தனது அணி சார்பாக கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் மேல் மாகாணத்துக்கு கோல் போடுவதற்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. இறுதியில் மேல் மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான போட்டி 1- 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.