ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ‘போலியான போராட்டங்களை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண்டாம்’ என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்ட கோஷத்துடன் பௌத்த பிக்குகளால் நேற்றைய தினம் கொழும்பில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பில் அமைந்துள்ள தாமரைத்தடாக முன்றலில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணியில் மகாசங்கத்தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்களும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
‘போலியான போராட்டங்க்ளை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண்டாம்’ என்ற வசனம் அச்சிடப்பட்ட பதாகையைத் தாங்கியவாறு அமைதியான முறையில் பேரணியாகச்சென்ற பௌத்த பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவை அண்மித்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தர்சிலைக்கு மலர்தூவி வழிபட்டனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிட்ட பௌத்த பிக்கு ஒருவர் பின்வருமாறு கூறினார்:
அனைத்து இனமக்கள் அமைதியான முறையில் ஒன்றிணைந்து வாழ்ந்த இந்த நாட்டில், மேற்குலக நாடுகளின் சதித்திட்டங்களில் அகப்பட்டு, அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, இரவிரவாக நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றுகூடி திட்டமிட்டுவிட்டு, அதிகாலை 2 மணிக்குப் போராட்டத்தில் குதிப்பவர்களை பௌத்த மகாசங்கம் நம்பிவிடும் என்று எவரேனும் கருதுவார்களாயின், அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன, புலனாய்வுத்துறை அதிகாரிகளும் பௌத்த பிக்குகளும் சிறையில் அடைக்கப்பட்டார்கள், வடக்கிற்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டது.
எமது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்களும் பாரம்பரிய அடையாளங்களும் அழிக்கப்பட்டன.
அவற்றைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்புவிடுத்தோம். ஆனால் இன்று அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் பேருக்கு எதிராக ஒரு கூட்டம் வீதியில் இறங்கியிருக்கின்றது.
ஆகவே தாம் தெரிவுசெய்த ஜனாதிபதியை விரட்டுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்ற செய்தியை அந்த 69 இலட்சம் பேரும் வீதியில் இறங்கி உரக்கச்சொல்லவேண்டிய நேரம் வந்திருக்கின்றது என்றார்.
இருப்பினும் மீண்டும் சிங்கள, பௌத்த மக்களிடையே இனவாதத்தையும் பேரினவாத சிந்தனைகளையும் தூண்டி, அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து இனமக்களும் ஒற்றுமையுடன் முன்னெடுத்துவரும் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு முயலும் கடும்போக்குவாத சக்திகளின் நடவடிக்கைகளில் ஒன்றே இதுவென்று சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]