தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு (Ravi Seneviratne) எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தனது பாதுகாப்புப் படையின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு
மற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முறையே 243 மற்றும் 200 மற்றும் 109 பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுவதாகவும் தமக்கு மாத்திரம் 30 மெய்ப்பாதுகாவலர்களை வழங்க எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது புரியாக புதிராகவே இருப்பதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தாம் ஓய்வு பெற்றாலும் தன்னைக் கொன்று விடுவோம் என பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக காவல்துறை புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் 63 இராணுவத்தினர் மற்றும் 180 காவல்துறையினர் அடங்கிய 243 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் மைத்திரிபால சிறிசேனவிடம் 109 காவல்துறையினரும், கோட்டாபய ராஜபக்சவிடம் 25 காவல்துறையினரும் 175 இராணுவத்தினருடன் 200 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளனர், ஆனால் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 50 இல் இருந்து 30 வரை குறைப்படுவதை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தாம் ஆட்சிக்கு வரும்போது உயரடுக்கு பாதுகாப்பு கிடைக்காது என ஜே.வி.பி தலைவர்கள் தெரிவித்த போதிலும் எமது நாட்டின் உயரதிகாரிகளுக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்வதாலேயே அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நூற்றுக்கணக்கான அரசாங்கத் தலைவர்களுக்கு பாதுகாப்புப் படைகள் வழங்கப்பட்டதா என முன்னாள் ஜனாதிபதி உரிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.