கொழும்பில் தீவிர பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக உயர்மட்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இராணுவம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பித்திருந்தமை குறித்து கடந்த சில தினங்களாக பேசும்பொருளாக இருந்தன.
இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறுகளை உருவாக்கி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த குழுவொன்று தயார் நிலையில் இருப்பதாக ஜனாதிபதிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அவசர கூட்டத்திற்கு அழைப்பு
கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பில் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உடனடியாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.
சாகல ரத்நாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடி அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு
அதற்கமைவாக இராணுவ தளபதி விகும் லியனகே, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருக்கு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.
உளவுத்துறை தகவல்களுக்கமைய, பாதுகாப்புப் படையினர் எவ்வாறு தயார் நிலையில் இருக்க வேண்டும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு வழங்கப்பட்டது.