”கொலை மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்; எதையும் சந்திக்கத் தயார்,” என, கேரளாவில், முஸ்லிம்களுக்கான தொழுகையை முன்னின்று நடத்திய முஸ்லிம் பெண், ஜமிதா கூறியுள்ளார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள மலப்புரம் மாவட்டம், வாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த குரான் சுன்னத் சொசைட்டியின் பொதுச் செயலராக உள்ளவர், ஜமிதா, 34. வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் தொழுகைகளை, வழக்கமாக ஆண்கள் தான் முன்னின்று நடத்துவர். கடந்த வாரம், ஜமிதா தலைமையில் சிலர் தொழுகையில் ஈடுபட்டனர். இதற்கு, முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. சிலர், ஜமிதாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இது குறித்து ஜமிதா கூறியதாவது: குரானில், ஆண், பெண் பேதம் ஏதுமில்லை. சமூகதளங்களில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, பலர் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். தொடர்ந்து என் பணியில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.