கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவர், மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்த பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகாத உறவு குறித்து பெண்ணுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடந்த பின்னர் பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் இணைந்து சடலத்தை துண்டுகளாக வெட்டி அதனை 03 உரைப் பைகளில் போட்டு ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களான இரண்டாவது கணவரும் மருமகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.