கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட பெரியகுளம் கனகராயனாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளில் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்போடு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனகராயன் ஆற்றினை அண்டிய பெரிய குளம் பகுதியிலும் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் சுமார் 25 அடி ஆழத்துக்கும் மேலாக அதிகளவில் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் தொடர்ந்து மணல் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை அளித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் இதுவரை மணல் அகழ்வை கட்டுப்படுத்த பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிகளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் ஆகியோர் இன்றைய தினம் (25) நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.