இலங்கையில் தற்பொழுது அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்த வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படவிருக்கின்றன என்று பிரதி உள்விவகார அமைச்சர் நிமல் லன்சா நேற்று முந்தினம் பாராளுமன்றில் தெரிவித்தார்.
கிராம சேவகர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை கடந்த வருடம் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினூடாக நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது அமைச்சுக்கு கிடைத்துள்ளன.
அதன்படி விரைவில் அவற்றுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அனைத்து வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும். அத்துடன் பதில் கிராம சேவையாளர்களுக்கான கொடுப்பனவை முடிந்தளவு நியாயமானதாக வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒன்றை நேற்று முந்தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட போதே பிரதியமைச்சர் இந்த விடயத்தினைத் தெளிவுபடுத்தினார்.